
கல்லூரி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வகையில், அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 6 இடங்களில் இயங்கி வரும் இவ்விடுதிகளின் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.
சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக வரும் ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் ஏப்.8-ம் தேதி சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், எம்ஆர்கே ஹாக்கி அரங்கம், நேரு பார்க் ஆகிய இடங்களில் காலை 7 மணிக்கு நடைபெறும்.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுகொள்ளப்படும். கூடுதல் விவரங்களை ஆடு கள தகவல் தொடர்பு மையத்தின் 9514000777 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அந்தவகையில் இந்த தேர்வுக்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 17 வயது நிரம்பிய கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் விளையாட்டு விடுதிக்காக விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் தனிநபர், குழு விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள், தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டு, தேசிய விளையாட்டு சம்மேளனம், இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள், பன்னாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்றவர்கள், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...