
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று முதல் தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சுமார் 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர்.
முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்குத் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் ஈடுபட இருக்கின்றனர். முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்
இதேபோல் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர். பிளஸ் 2 தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படாத வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களே… மதிப்பெண்கள் உங்கள் அறிவுத்திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல; வாழ்வின் அடுத்தநிலைக்கான படிக்கட்டுகள்! Stay calm, do your best, and succeed. All the best! என்றும்,
உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணை
கடந்த ஒராண்டு காலமாக மாணவச் செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது அரவணைப்பில் நீங்கள் இந்த பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இந்த பொதுத்தேர்வுகள் உங்களது உயர் கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். மாணவர்கள் ஆகிய நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.
தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும்
நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள் அனைத்தும் உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்கு உள்ளது. பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு திட்டங்கள்
உங்களது உயர் கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...