அரசு பள்ளி என்றால், முகத்தை சுளிக்கும் இந்த காலத்தில், தொழிலதிபர் ஒருவர், தன் மகனை அரசு பள்ளியில் சேர்த்ததுடன், 2.18 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
சிக்கமகளூரு, மூடிகெரேவின் முத்திகேபுரா கிராமத்தில் வசிப்பவர் தொழிலதிபர் சந்தோஷ். இவர் காபி ஏற்றுமதி தொழில் செய்கிறார். இவர் சிறு வயதில் அரசு பள்ளியில் படித்து, தொழிலதிபராக வளர்ந்தவர். எனவே இவருக்கு அரசு பள்ளி மீது அபார பற்றுள்ளது.
பண வசதி கொண்டவராக இருந்தும், தன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பவில்லை. தன் தொழிற்சாலை அருகில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் மகனை சேர்த்தார். அது மட்டுமின்றி பள்ளிக்கு 2.18 கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.
கடந்த 1973ல் துவக்கப்பட்ட இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ளது. கன்னடம், ஆங்கில வழி கல்வி அளிக்கப்படுகிறது. ஆங்கில வழியில் 150 மாணவர்கள் உட்பட மொத்தம் 363 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
தொழிலதிபர் சந்தோஷ் உதவியுடன், பள்ளிக்கு எட்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 18 லட்சம் ரூபாய் செலவில், ஆடிட்டோரியம் கட்டப்பட்டது. இது தவிர 'விவேகா' திட்டத்தின் கீழ், நான்கு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. 12 அறைகளும் பிப்ரவரி 28ம் தேதி திறக்கப்படவுள்ளது.
இதே கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் சித்திக் என்பவர், தற்போது சவுதி அரேபியாவில் வசிக்கிறார். அவரும் இப்பள்ளியை தரம் உயர்த்த நிதியுதவி வழங்குகிறார். பள்ளி வளாகம், வகுப்பறைகளில் 20 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கவும், நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர்.
ஐந்து லட்சம் ரூபாய் செலவில், நவீன சமையல் அறை கட்டப்படுகிறது. தனியார் பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் அரசு பள்ளியில் செய்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...