![Tamil_News_large_3439587 Tamil_News_large_3439587](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3439587.jpg)
'பராசக்தி' சினிமா வசனத்தை போல 'எமிஸ்' இணையதள பதிவேற்றம் குறித்து ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வைரலாகி வருகிறது.
தமிழக அரசு கல்வித்துறை சார்பில் 'எமிஸ்' இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இதில் மாணவர்கள் குறித்த பல்வேறு விபரங்களை அந்தந்த அரசு பள்ளி ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதனால் ஏற்படும் மன உளைச்சலை 'பராசக்தி' சினிமா வசன பாணியில் ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அந்த ஆசிரியர் பேசியிருப்பதாவது:
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் தேர்வுத்தாள் டவுன்லோடு செய்து தேர்வு வைக்கவில்லை; பல்வேறு 'எமிஸ்' பதிவேற்றங்களை முடிக்கவில்லை என்று. நீங்கள் நினைப்பீர்கள் நான் எதையெல்லாம் மறுக்க போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. இலவச பதிவுகளை கொடுக்காமல் போட சொன்னீர்கள் மறுத்தேன்.
உடல்நலக் கூறுகளை பதிவிட சொன்னீர்கள். நான் மருத்துவம் படிக்கவில்லை எனச் சொன்னேன். வினாத்தாள் பிற்பகல் 2:00 மணிக்கு வரும் என்றார்கள். தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை. பின் எமிசில் வரும் என்றார்கள். அதிலும் தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை.
தேர்வுத்தாளை தேடித்தேடி அலைய விட்டது யார் குற்றம்? வலைதளத்தின் குற்றமா? இல்லை வலைதளத்தை வைத்து மாணவர்களின் கல்வியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீணர்களின் குற்றமா?
உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்கிறீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
வினாத்தாளை தேடித்தேடி வலைதளங்களின் பின்னால் ஓடினேன்... ஓடினேன். நெட் பேலன்ஸ் தீரும் வரை ஓடினேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது.
தேர்வுத் தாளுக்காக ஆசிரியர்களை இப்படி அலையவிட்டது யார் குற்றம்? ஒன்றுக்கும் உதவாத எமிசின் குற்றமா? அதை சரியாக வைக்காத எமிஸ் டீமின் குற்றமா? நிம்மதியாக பாடம் நடத்த தேர்வு நடத்த விட்டீர்களா எங்களை...'
இவ்வாறு அதில் அந்த ஆசிரியர் தன் கண்டனக் கருத்தைப் பேசியுள்ளார்.
இந்தப் பதிவு ஆசிரியர்கள் தொடர்புடைய குழுக்களில் வைரலாகி பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...