![1626372022619 1626372022619](https://1.bp.blogspot.com/-w6Ome6_xq6I/YPB36cFL6tI/AAAAAAAA3xw/6Zd2SJIpSmwMlgR2q3AIDUVN467bv1dzQCLcBGAsYHQ/s0/1626372022619.jpg)
நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு, நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம், அதனால் இங்கு தேர்வு உண்டு என்று புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கல்வி அமைச்சராக நமச்சிவாயம் பொறுப்பேற்றுள்ளார். அவர் கல்வித்துறை தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். மேலும் பல்வேறு தரப்பினரும் துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் அளித்தனர். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
'' கல்லூரி மாணவர்களுக்கு எந்த முறையில் தேர்வு நடக்க உள்ளது?
அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடம் பேசிவிட்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன்.
நிர்ணயிக்கப்பட்ட 75 சதவீதத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளது அதிகமாக உள்ளதே?
தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிப்பதாக அரசிடம் புகார் வந்துள்ளது. இதுதொடர்பாகக் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டா?
நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் நம்முடைய அரசாங்கத்தை நடத்த முடியும். அதனால் இங்கு தேர்வு உண்டு.
புதுச்சேரியிலுள்ள 21 சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களுக்கு, ஊழியர்களுக்குக் கடந்த ஆட்சியில் இருந்தே சரியான நேரத்தில் ஊதியம் தருவதில்லையே?
சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களுக்கு, ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் கடந்த ஆட்சியில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. இதுபோல் கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தையும் இந்த அரசில் சரி செய்வோம்''.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...