Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலூரில் ஒரு பள்ளி மூடல் அங்கீகார பிரச்னையால் நடிகர் ரஜினி பள்ளிக்கும் சிக்கல்!

           சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 'தி ஆஷ்ரம்' பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால், பள்ளியை அதிகாரிகள் மூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
           வேலுாரில், ஆபீசர்ஸ் லேன் பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, 1972ல் தொடங்கப்பட்டது. இந்த பள்ளிக்கு, ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. பள்ளி உள்ள இடம், வேறு ஒருவருக்கு சொந்தமானது என, பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிய வந்தது.
அதனால், நடப்பு கல்வி ஆண்டில், அந்த பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்க கோரி விண்ணப்பம் வந்தபோது, பள்ளியின் இடம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அப்போது தான், அந்த இடம் வாடகை நடைமுறையிலும் இல்லாமல், விதிப்படி, 30 ஆண்டு குத்தகையும் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரிய வந்தது. எனவே, செயின்ட் ஜான்ஸ் பள்ளி அங்கீகாரம், சில தினங்களுக்கு முன் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு, பள்ளி மூடப்பட்டது. பள்ளியின் முக்கிய ஆவணங்களை, அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அங்கு படித்த, 370 மாணவர்களில், இதுவரை, 270 பேரை அருகில் உள்ள, பெற்றோர் விரும்பும், தனியார் பள்ளிகளில் எந்த கட்டணமும் இன்றி சேர்த்துள்ளனர்.
இதை தொடர்ந்து, இதே பிரச்னையில் சிக்கியுள்ள, சென்னை ஆஷ்ரம் பள்ளி குறித்து, அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.
நடிகர் ரஜினியின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில், 'தி ஆஷ்ரம்' பள்ளி, சென்னை, கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள, மெட்ரிக் பள்ளிக்கு, நான்கு ஆண்டுகளாக அனுமதியில்லை.
பள்ளி உள்ள இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு, பள்ளிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் ஸ்ரீதேவி, 'இந்த ஆண்டு, ஜனவரி, 27ல் நடக்கும் விசாரணையில், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்' என, சம்மன் அனுப்பினார்.
இந்த சம்மனை ரத்து செய்ய கோரி, பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தடையை விலக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், ஆஷ்ரம் பள்ளி சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதால், பள்ளி அங்கீகாரத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு தராவிட்டால், பள்ளியின் மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலுாரில் மூடப்பட்ட செயின்ட் ஜான்ஸ் பள்ளி போன்று, ஆஷ்ரம் பள்ளி இருக்கும் இடமும், வேறு ஒருவருக்கு சொந்தமானது. பள்ளியின் இட உரிமையாளர் வாடகை பாக்கியை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறார் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive