அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே
செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்பு முதல் தேர்வு நடத்தப்பட
வேண்டும் என்றும் சுப்பிரமணியன் குழு பரிந்துரை செய்துள்ளது.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி திட்டத்தின்படி தற்போது 8-ஆம் வகுப்பு வரை
அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டம் அமலில் உள்ளது.
புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முன்னாள்
செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சகத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தது.
தங்களது 200 பக்க ஆய்வறிக்கையில், தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி
வரையிலான கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு பரிந்துரைகளை அந்தக்
குழு தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் வெளிநாட்டு கல்வி
நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க அனுமதி அளிக்கலாம் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், கட்டாயத் தேர்ச்சி திட்டத்தை 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே
செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்பு முதல் தேர்வு நடத்தப்பட
வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து
தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
இந்திய கல்வி நிறுவனங்கள் பல உலக தர வரிசையில் இடம்பெற முடிவதில்லை.
இந்நிலையில், உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், குறிப்பிட்ட சில
நிபந்தனைகளுடன் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி
அளிக்கலாம்.
மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் தொழில் பயிற்சி சார்ந்ததாக கல்வி
இருக்க வேண்டும். தொழிற் கல்வியை நெறிமுறைப்படுத்த யூஜிசி, ஏஐசிடிஇ போன்ற
அமைப்புகள் அடங்கிய ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வுகளில் பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து
அந்தக் குழு விரிவாக ஆய்வு செய்துள்ளது.
மாணவர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கல்வியில் மாற்றம்
செய்ய வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...