Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Too hard to getting B.E seats!?

பிளஸ் 2 தேர்வு கடினம்: பி.இ., 'சீட்' கிடைக்குமா?

       பிளஸ் 2 தேர்வுகள் கடினமாக உள்ளதால், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்.
அதனால், திறமையான மாணவர்களுக்கே, பி.இ., - பி.டெக்., படிப்பில், விரும்பிய பாடம் மற்றும் கல்லுாரி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் முடிந்து, உயர் கல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பாட தேர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களின் மதிப்பெண் தான், இன்ஜி., மற்றும் மருத்துவம் போன்ற உயர் கல்விக்கான வாய்ப்பை முடிவு செய்யும்.

மறுதேர்வு:
* இந்த ஆண்டு, வேதியியல் தேர்வு, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உயர் கல்வி கனவை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இது, மாணவர்களை கூடுதலாக சிந்திக்க வைத்து எழுத வைக்கும் தேர்வாக மாறி விட்டது. தேர்வுக்காக மட்டும் புத்தகத்தில் உள்ளதை படித்து விட்டு வந்து எழுதிய மாணவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதனால், மாணவர்களும், தனியார் பள்ளிகளும் எளிதான கேள்வித்தாளுடன் மறு தேர்வு உண்டா என, பல வகையிலும் முயற்சிக்கின்றனர்* அடுத்து, கணித தேர்விலும் புதிய கேள்விகள் கேட்கப்பட்டதோடு, நீண்ட பதில்களை உடைய கேள்விகள், போட்டி தேர்வு போல் யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தன. இது, 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது
* இவை தவிர, இன்ஜி., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில், ஒரு பிரிவுக்கு கணினி அறிவியல் தேர்வு; மற்றொரு பிரிவுக்கு இயற்பியல் தேர்வு மட்டுமே பாக்கி உள்ளன. கணிதம், அறிவியல் சார்ந்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான, உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வுகள்உள்ளன.
கடும் போட்டி:
வேதியியல் மற்றும் கணிதத்தில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும் என்பதால், 'கட் ஆப்' மதிப்பெண், 190க்கும் குறைவாகவே இருக்கும். இதில், அதிக மாணவர்கள், ஒரே மாதிரியான, 'கட் ஆப்' பெறுவர் என்பதால், இன்ஜி., கல்லுாரிகளில், விரும்பிய படிப்பில் சேர, கடுமையான போட்டி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், அரசு ஒதுக்கீட்டில் அரசு இன்ஜி., கல்லுாரி மட்டுமின்றி, தனியார் இன்ஜி., கல்லுாரிகளிலும் கடும் போட்டி இருக்கும். மாணவர்களின் மதிப்பெண்ணில் பெரும் மாற்றம் இருக்கும் என்பதால், விரும்பிய பாடங்கள், விரும்பிய கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடு மட்டுமின்றி தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் அதிக கிராக்கி ஏற்படும். எனவே, கல்லுாரிகளின் விவரங்களை தற்போதே சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பெற்றோர் ஆளாகி உள்ளனர். 
ஆய்வு செய்ய நிபுணர் குழு:
மார்ச், 14ல், தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு வேதியியல் தேர்வும்; இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கணித தேர்வும் நடந்தன. இரண்டு தேர்வுகளும் கடினமாக இருந்ததால், மாணவ, மாணவியர், பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.கணித தேர்வு மிக கடினமாக இருந்ததால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதற்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கை வலுத்தது. இந்த பிரச்னை பார்லிமென்டிலும் எதிரொலித்ததால், சி.பி.எஸ்.இ., தரப்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவால், பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கேற்ப விடைத்தாள் திருத்தத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில், பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததால், அதற்கு ஏதாவது மாற்று தீர்வு காண வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரமாக இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்களும் இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். அதேநேரம், தேர்வுத்துறை தரப்பில், ஆசிரியர்களிடம் வினாத்தாள் குறித்து மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், வினாத்தாளில் எந்த தவறும் இல்லை; தரமான வினாத்தாள் என, பல ஆசிரியர்கள் பாராட்டியுள்ளதாக தெரிகிறது.ஆனாலும், இந்த பிரச்னை அரசியலாகாமல் இருக்க, சி.பி.எஸ்.இ., போல நிபுணர் குழு அமைத்து முடிவு எடுக்கலாமா என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. முதல்வரிடமிருந்து உரிய அனுமதி கிடைத்தால் குழு அமைக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




1 Comments:

  1. ஆடத் தெரியாதவன் தெரு கோனல் என்றானாம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive