மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு
அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு சட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்
நிறைவேறியது.
சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், மகளிர் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
""மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அந்த மசோதாவை விரைவில் நிறைவேற்றி, மகளிருக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பெண்களின் நலனுக்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:
மணல் கடத்தல்காரர்களைத் தடுத்ததற்காக, பெண் தாசில்தார் ஒருவரை தெலுங்கு தேச எம்எல்ஏ ஒருவர் அடித்துள்ளார். எங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ காரணம் இல்லாமல் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாதில் நடந்த ஈவ் டீசிங் வழக்கு ஒன்றில் தெலுங்கு தேச எம்எல்ஏ ஒருவரின் மகன் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மற்றொரு எம்எல்ஏ, பெண்களைப் பற்றி தவறாகப் பேசுகிறார். இதுதான் நீங்கள் பெண்களை மதிப்பதற்கான உதாரணமா? என்றார் ஜெகன்மோகன் ரெட்டி.
அவரது பேச்சுக்கு, ஆளும் தெலுங்கு தேச எம்எல்ஏக்கள் பதிலடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இதனிடையே, பெண்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக "181' என்ற இலவச அழைப்பு எண் தொடங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக "அபயம்' என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலி விரைவில் தொடங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க, விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றார் சந்திரபாபு நாயுடு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...