தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் தேர்தல்
நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும்
பறக்கும்படையும், கண்காணிப்புப் படையும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 24 மணிநேரமும் இந்தச் சோதனைகள்
நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாகனச் சோதனையில் காரணமாக சென்னை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த தகவல்:
சென்னையில் நடத்தப்பட்ட சோதனை மூலம், ஒரே நாளில் ரூ.23.70 லட்சமும், நீலகிரியில் ரூ.4.90 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிற இடங்களில் ரூ.2 லட்சம் வரை பறிமுதலாகியுள்ளது. மொத்தமாக, இதுவரை ரூ.30.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதும் மாவட்ட கருவூலங்களில் செலுத்தப்பட்டுள்ளது.
பணத்தின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அளித்து பணத்தை பெற்றுச் செல்லலாம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. காய்கறி சந்தை போன்றவற்றில் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகளிடம் எந்தச் சோதனையும் நடத்தப்படுவதில்லை.
பேனர்கள்-போஸ்டர்கள்: மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் உரிய அனுமதி பெற்ற பிறகே வைக்க வேண்டும். தேர்தல் விதிகளை அறியாமல் பேனர்கள், போஸ்டர்களை வைக்கின்றனர்.
எனவே, சென்னை போன்ற பெருநகரங்களில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள், அதனை அச்சிடுபவர்களிடம் தேர்தல் ஆணையத்தின் சார்பில் உரிய அறிவுறுத்தல்கள்-ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...