உத்திர பிரதேசத்தில் ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வரும்
நிலையில், ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் 2000 ஆசிரியர்கள், போலி ஆசிரியர்
சான்றிதழ் (பி.எட்.,) வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு
புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி
கல்லூரிகளில் போலி சான்றிதழ் அளித்து ஊழல் நடந்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா பல்கலை.,க்கு உட்பட்ட ஆக்ரா, மதுரா, மணிப்பூரி,
பிரோசாபாத் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில்,
கல்லூரிக்கே வராத ஏராளமான மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் பல்கலை.,யின் மூத்த அதிகாரிகள் பலர் ஈடுபட்டிருப்பதாக
சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. போலி சான்றிதழ் விவகாரம்
தொடர்பாக முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட 5 மூத்த அதிகாரிகள் மீது
சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலை.,அதிகாரிகள் பலருக்கும் பணம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்ற
400க்கும் மேற்பட்ட பல்கலை., மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆரில்
சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போலி சான்றிதழ்களை கொண்டு ஆசிரியர் வேலைக்கு
விண்ணப்பித்திருக்கும் 400 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு,
விசாரிக்கப்பட்டு வருகிறது. மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 2000
பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணையின் முடிவில் பல்கலை., அதிகாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கைது
செய்யப்படுவார்கள் என சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. 2012ம்
ஆண்டு சுனில்குமார் என்ற மாணவருக்கு, பல்கலை.,யால் இரு வேறுபட்ட தேர்வு
முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட
விசாரணையிலேயே, இந்த சான்றிதழ் முறைகேடு விவகாரம் வெளிச்சத்திற்கு
வந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...