'தினமலர்' செய்தி எதிரொலியாக, 20 ஆண்டுகளுக்குப் பின், முறையாக
வினாத்தாள் தயாரித்து, ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, உடற்கல்விப்
பாடத்துக்கான தேர்வு துவங்கப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில், வாரத்திற்கு இரு நாட்களாவது, உடற்கல்வி வகுப்புகள்
நடத்தப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன், சமச்சீர் கல்வி அறிமுகமான
போது, ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடும், சி.சி.இ.,
முறை அமலானது.
இந்த முறையில், உடற்கல்விப் பாடத்துக்கு தேர்வு
நடத்தி, அதற்கு மதிப்பெண்கள் கொடுக்க வேண்டியது கட்டாயம்.ஆனால், கடந்த
வாரம் வரை, உடற்கல்விப் பாடத்துக்கு பாடப்புத்தகமும் வழங்கவில்லை; தேர்வும்
நடத்தப்படவில்லை.
உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம்
சார்பில், பெயரளவில் வினாத்தாள் தயாரித்து, சில இடங்களில் மட்டும் தேர்வு
நடத்தினர். இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இந்நிலையில், 1995க்குப் பின், முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறை
சார்பில், உடற்கல்விப் பாடத்துக்கு, சென்னை உட்பட பல மாவட்டங்களில்,
சனிக்கிழமை தேர்வு நடத்தப்பட்டது; வினாத்தாள்களும் அச்சடித்து
வழங்கப்பட்டன.
மொத்தம், 40 மதிப்பெண்களுக்கு, 30
நிமிடங்கள் எழுதும் அளவுக்கு வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. வாள்
வீச்சுப் போட்டி, கிரிக்கெட், யோகாசன முறைகள் மற்றும் கபடி உள்ளிட்ட, பல
விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
உடற்கல்வி
ஆசிரியர்கள் கூறுகையில், 'தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதும், தேர்வு
நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். பொதுவாக வினாத்தாள் தயாரித்து அனுப்பினர்.
இதேபோல், பாடப்புத்தகங்களையும் விரைவில் வழங்கினால், உடற்கல்வி
ஆசிரியர்கள், பள்ளிகளில் ஏவலாளாக செயல்படாமல், ஆசிரியர்களாக செயல்பட
முடியும்' என்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...