Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திசை மாறும் இளங்கன்றுகளுக்கு நற்பாதை காட்ட இனி ஒரு விதி செய்வோம்: நல்லதை விதைத்து நல்லதையே அறுவடை காணுவோம்

        அதிக சுதந்திரமும், அதிக கட்டுப்பாடும் மாணவர்களை தவறான வழிக்கு தூண்டும்; மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பியதுடன் பணி முடிந்தது என நினைக்காமல் கண்காணிப்பு செய்தால் நல்வழிக்கு இட்டுச்செல்ல முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

'இளைய சமுதாயம் நாளைய பாரதம்' என பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பலமே இளைஞர்கள் தான் என ஒரு பக்கம் குரலும் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி இளைஞர்களால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. இதுபோன்றே பெற்றோரும், நமது பிள்ளைகள் படித்து வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ்., பொறியாளர், டாக்டர் என பல்வேறு கனவுகளுடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். வசதிக்கேற்றாற்போன்று பலரும் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைத்து அவர்கள் கேட்டதையெல்லாம் செய்து தர தங்களையே பெற்றோர் அர்ப்பணித்து விடுகின்றனர். 


இவ்வாறு பெற்றோரும், நாடும் இளைஞர்களிடம் வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவர்களது பாதை திசை மாறி வருவது சமூக ஆர்வலர்களை வேதனையடையச் செய்துள்ளது. 

பள்ளிக்கு செல்லும் சில மாணவர்களை, திசை திருப்ப ஒரு கூட்டமே செயல்படுகிறது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை. மாணவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், சிலரின் தவறான வழிகாட்டுதலால், அவர்கள் திசை மாறிச்செல்வதை கண் கூடாக காண முடிகிறது. பெற்றோர் அதிக சுதந்திரம் கொடுத்துவிடுவதுடன், அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, செலவிற்கு பணம் கொடுத்தும் விடுவதும் தவறு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஒரு சில பெற்றோர் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டால் பணி முடிந்தது என நினைத்து விட்டு, அவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கே செல்கிறார்கள்? பள்ளியில் நன்றாக படிக்கின்றனரா? என்பதை கூட கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் தவறான பாதைக்கு சென்று தங்களது எதிர்காலத்தையே தொலைத்து விடுகின்றனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விடுவதால், அவர்கள் லட்சியமும் மண்ணில் புதைந்து போய்விடுகிறது. மதுபானக்கடைகளில், மாணவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு எளிதாக மது கிடைக்கிறது. இது மட்டுமின்றி, போதை தரும் வஸ்துக்கள் பள்ளி அருகே உள்ள கடைகள் மற்றும் ஒரு சிலரால் மறைமுகமாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது வெறும் குற்றச்சாட்டு அல்ல என்பது பல்வேறு சம்பவங்களும் இவை உண்மையானது என்பதை உணர்த்துகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், ஆபாச படம் பார்த்த மாணவியர் 'சஸ்பெண்ட்', மது குடித்த மாணவி போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. மாணவர்கள் சீருடையுடன் மது குடித்து படுத்துக்கிடப்பது போன்று பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றிலும் அவ்வப்போது இளைய சமுதாயம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன் படங்கள் வெளியாகியதும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
'மாணவர்கள் நன்றாக படிக்கின்றனரா? உடன் பழகும் நண்பர்களின் குணம் உள்ளிட்டவையும் கண்டறிய வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு முறையாக வருகின்றனரா என கண்காணித்து ஆசிரியர்களும் பெற்றோருக்கு தகவல் அளிக்க வேண்டும்.பெற்றோர் - ஆசிரியர்களுக்கிடையே ஒரு நல்ல தகவல் பரிமாற்றம், நட்பு இருக்க வேண்டும். இளைய சமுதாயம் தவறான பாதைக்கு செல்லாமல் தடுப்பது ஒவ்வொருக்கும் கடமை உள்ளது,' என்றனர்.

பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணன் கூறியதாவது: 
மாணவர்கள் தவறான பாதைக்குச்செல்ல முக்கிய காரணம் அதிக சுதந்திரம் தான். மாணவர்களை அதிகமாக கட்டுப்படுத்துவதும், அதிகமாக சுதந்திரம் அளிப்பதும் அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும். அதிக சுதந்திரம், கட்டுப்பாடு, கேட்டது எல்லாம் கிடைக்கிறது என்பதால் தான் மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல ஒரு காரணமாக உள்ளது. 
'இளங்கன்று பயமறியாது' என்பதற்கேற்றாற் போன்று, 13 வயது முதல் 21 வயது வரை மாணவர்கள் எதையும் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போது தான் நாம் அவர்களை வழிநடத்திச் சென்று, சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மெல்ல மெல்ல வரும் மேலை நாட்டு கலாசாரத்திற்கு விடை கொடுக்க வேண்டும். கல்வியுடன் சேர்ந்து, நமது கலாசாரம், பண்பாடு போன்றவற்றையும் வளர்க்க வேண்டும். சுதந்திரமும் கொடுத்து, கண்காணிப்பும் செய்தால் நல்வழிப்படுத்தலாம். பள்ளிகளில், முன்னோர்கள் படிக்கும் போது நல்வழிப்படுத்த கதை சொல்லும் வகுப்புகள் இருந்தது போன்று தற்போதுள்ள மாணவர்களுக்கும் இம்முறை கொண்டு வர வேண்டும். ஒவ்வொருவரும் தமது குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

'அலட்சியம் கூடாது':


மது அருந்தும் சம்பவங்கள் இங்கு நடக்கலை வேறு எங்கோ நடந்துள்ளது என எண்ணி யாரும் அலட்சியத்துடன் இருக்க கூடாது. இன்று பக்கத்து ஊரில் நடந்த சம்பவம் நமது பகுதியிலும் நடக்கலாம்; ஏன் நமது வீட்டிலும் நடக்கலாம். எனவே, நாம் ஒவ்வொருவரும் கவனமுடன் இருக்க வேண்டும். 
நமக்கு நடந்தால் தான் எல்லாம் என எண்ணாமல், ஒரு சம்பவமே எடுத்துக்காட்டாக கொண்டு பிள்ளைகள் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், தவறான பாதைக்கு செல்லாமல் நல்ல நிலைக்கு கொண்டு செல்லலாம். எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கிலே... அது நல்லவர் ஆவதும், கெட்டவர் ஆவதும் நமது வளர்ப்பில்தான் உள்ளது.
ஆசிரியர்களும், பெற்றோரும் இணைந்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கின்றனர் கல்வி மற்றும் சமூக ஆர்வலர்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive