Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

       “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே. சுருக்கமாக வி.கே. பாண்டே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி.

           இன்றைய தேதிக்கு இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் விவாதிக்கப்படும் மேகி நூடுல்ஸ் விவகாரத்தின் சூத்ரதாரி அவர். உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் நாடு முழுவதும் திடீர் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் இவருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு என்று நடிகர் நடிகைகளால் விளம்பரப்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸுக்கு எதிரான இவரது யுத்தத்தின் பின்னணியில் அவரது குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆம், அவரது குழந்தைகளும் மேகி நூடுல்ஸை விரும்பி சாப்பிடுபவர்களாகத்தான் இருந்தனர். ஆனால், இன்று எல்லாமே தலைகீழ். உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படும் ரசாயனப் பொருட்கள் அடங்கிய மேகி நூடுல்ஸைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவின் குழந்தைகளுக்கே சொல்லியிருக்கிறார் வி.கே. பாண்டே.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி நகரில் உள்ள ‘ஈஸி டே’ பல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான ‘மேகி’ நூடுல்ஸ் பாக்கெட்டுகளை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் குழு சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியது. வணிகரீதியாக அஜினோமோட்டோ என்று அழைக்கப்படும் மோனோசோடியம் குளுடாமேட் உணவில் அதிக அளவில் சேர்க்கப்பட்டால் உடல் நலக் குறைவு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேகி நூடுல்ஸில் இது சேர்க்கப்படவே இல்லை என்றுதான் அதன் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் வழக்கமாக அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக எம்.எஸ்.ஜி. இருந்ததை ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. எனினும் இதை ஏற்றுக்கொள்ளாத நெஸ்லே நிறுவனம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள ஆய்வகம் ஒன்றில் மேகி நூடுல்ஸ் சோதனை செய்யப்பட்டபோது, இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் எம்.எஸ்.ஜி. மட்டுமல்லாமல், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

 கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனை என்றாலும் அதன் முடிவுகள் சமீபத்தில்தான் வெளிவந்தன. ஊடகங்களில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைக்குத் தலைமையேற்று முனைப்புடன் நடவடிக்கை எடுத்தவர் வி.கே. பாண்டேதான்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive