Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பேய் நடமாடுவதாக பீதி: அரசு பள்ளியில் மயங்கி விழுந்த மாணவ–மாணவிகளால் பரபரப்பு

            தலைவாசல் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவ–மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டதால் புத்தகப்பையில் மந்திரித்த வேப்பிலை மற்றும் எலுமிச்சைப்பழத்தை மாணவர்கள் எடுத்துச்செல்கின்றனர்.

திடீர் மயக்கம் 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில் உள்ளது இந்திராநகர். இந்த பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஒரு ஆசிரியரும் வேலை செய்து வருகிறார்கள்.


இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மாணவ–மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை படித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென முதல் வகுப்பு மாணவர் சஞ்சய், 2–ம் வகுப்பு மாணவி ரம்யா, 3–ம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், சந்தோஷ், மாணவி யுவராணி ஆகியோர் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். மேலும், அவர்கள் உடம்பை முறுக்கியபடி காணப்பட்டனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு 

இதை பார்த்த தலைமை ஆசிரியர் மருதமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், பெற்றோர்களை வரவழைத்து மாணவ–மாணவிகளை அவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார். அதன்படி, பெற்றோர் அவர்களை டாக்டர்களிடம் அழைத்துச்சென்று காண்பித்தனர். அங்கு மாணவ–மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, பள்ளியில் இருந்த மாணவர்கள் அரவிந்த், தமிழ்செல்வன், தமிழ்மணி, அருண், கவுதம் ஆகியோரும் மயக்க நிலையில் இருந்து உள்ளனர். உடனே ஆசிரியர்கள் அவர்களையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் காட்டுத்தீபோல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டனர்.

பேய் பீதியால் பரபரப்பு 

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக இந்த பள்ளிக்கு செல்லும் எங்கள் குழந்தைகள் வகுப்பறைக்குள் சென்றவுடன் இப்படி மயங்கி விழுந்து உடம்பை முறுக்குகின்றனர். வகுப்பறையை விட்டு வெளியே வந்தவுடன் சரியாகி விடுகிறார்கள். இந்த பள்ளியில் பேய் நடமாடுவதாக கூறுகின்றனர். இதனால் நாங்கள் கோவிலில் மந்திரித்த வேப்பிலை, எலுமிச்சைப்பழத்தை குழந்தைகளின் புத்தகப்பையில் போட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்’ என்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மருதமுத்து கூறும்போது, ‘வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ–மாணவிகள் வகுப்பறைக்குள் சென்ற 1 மணி நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்கள். இதனால் அவர்களை டாக்டர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால், பள்ளியில் பேய் நடமாடுவதாக புரளியை கிளப்பி விட்டார்கள்’ என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive