பிளஸ் 2 தேர்வு தமிழ் இரண்டாம் தாளில், ஸ்ரீரங்கம் குறித்து ஒரு மதிப்பெண்ணில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. காது கேளாத மாணவர்களுக்கு மட்டும், ஒரு கேள்வி தனியாக இடம் பெற்றிருந்தது.
அரசுத் தேர்வுத் துறையின் அதிரடி மாற்றங்களுடன், பிளஸ் 2 தேர்வு, நேற்று
முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, தமிழ் வழியில்
கற்றவர்களுக்கு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. தமிழ் இரண்டாம் தாளை
பொறுத்தவரை, மொத்தம், 80 மதிப்பெண்களுக்கு, எட்டு பிரிவுகளில், 32
கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இதில், பத்து, இருபது வரிகள் மற்றும் ஒரு
பக்கம் எழுதுதல், உவமை, உருவகம், எதுகை - மோனை, கற்பனைக் கட்டுரை போன்ற
வகைகளில், கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இதில், 'ஸ்ரீரங்கத்தில்,
ஸ்ரீரங்கநாதருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது' என்ற கேள்விக்கு, வடமொழிச்
சொற் கலப்பை நீக்க எழுத குறிப்பிடப்பட்டு இருந்தது. இதேபோல், சொந்த வீடு
கட்ட கடன் வாங்கி அல்லற்பட்ட, இரண்டு பேர் சந்தித்து உரையாடுவதைக் கற்பனைக்
கட்டுரை எழுதும் கேள்வியும் இடம் பிடித்தது. மேலும், ஆங்கிலப் பழமொழிகளைத்
தமிழில் மொழி பெயர்க்கும் கேள்வி, காதுகேளாத மாணவர்களுக்கு
வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மொழி பெயர்ப்புக்குப் பதில், தனியாக
கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை தரப்பட்டு, அதிலிருந்து கேள்வி
கள் கேட்கப்பட்டிருந்தன.
மின் தடையால் மாணவர்கள் அவதி:
நேற்று, சென்னை உட்பட பல மாவட்டங்களில், பிளஸ் 2 தேர்வு மையங்களில், திடீர்
மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், மின் விசிறிகள் இயங்காமல், மாணவ, மாணவியர்
புழுக்கத்தில் அவதிப்பட்டனர். அவ்வப்போது மின் தடை ஏற்பட்ட தால், மைக்
மூலம், மணியோசை பரவச் செய்ய முடியவில்லை. அதனால், தேர்வு மையத்தில்,
எச்சரிக்கை மணிக்கு அருகில் உள்ள அறைகளைத் தவிர, மற்ற அறைகளுக்கு மணியோசை
கேட்கவில்லை. இதனால், தேர்வு நேரம் முடிந்த பிறகே, பல மாணவ, மாணவியர் அவசர
அவசரமாக விடைகளை எழுதி முடித்தனர்.
காப்பி அடித்து சிக்கிய 11 பேர்:
பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் காப்பியடித்த, 11 பேர் பிடிபட்டு உள்ளனர்.
இதில், பள்ளி மாணவர்கள் நான்கு பேர்; மற்றவர்கள் தனித்தேர்வர்கள்.
ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில், தலா ஒரு பள்ளி
மாணவர் சிக்கினர். கடலூரில் மூன்று, திருவண்ணாமலையில், நான்கு
தனித்தேர்வர்கள் சிக்கியுள்ளனர். இத்தகவலை, தேர்வுத் துறை இயக்குனர்
தேவராஜன் வெளியிட்டு உள்ளார். 'காப்பியடித்தால், ஓராண்டு முதல்
ஐந்தாண்டுகள் வரை தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்' என தேர்வு மையங்களில்
எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...