அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணி
முதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்
கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதியிலிருந்தும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதியிலிருந்தும் தொடங்குகிறது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு
தயார்படுத்துவது தொடர்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் எஸ்.கண்ணப்பன்
புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
அரையாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மூன்று நிலைகளாகப்
பிரித்துக்கொண்டு அவர்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். அரையாண்டுத்
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், எதிர்காலத்தைப் பற்றிய
சிந்தனையில்லாத மாணவர்களையும் பொதுத்தேர்வில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்
என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களிடம் சிறந்த
கல்வித் தொண்டு ஆற்றிட வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த 2
மாதங்களுக்கு காலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக
மாணவர்களை காலை 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும்.
தலைமையாசிரியரால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆசிரியர்களும் பள்ளிக்கு
வந்து மாணவர்களை வரிசையாக அமரச் செய்து படிக்க வைக்க வேண்டும். அன்றாடம்
படிக்க வேண்டிய பகுதிகள் பாட ஆசிரியர்களால் பிரித்துத் தரப்பட வேண்டும்.
சிறு வினா, குறு வினா, பெரு வினா, மனப்பாடப் பகுதிகள் படித்து ஒப்புவிக்கச்
செய்தல் வேண்டும். ஒப்புவித்த பகுதிகள் இறுதியில் எழுதிக்
காண்பிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும்.
மதிய உணவு இடைவேளை நேரத்திலும் உணவருந்தும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில்
மாணவர்களைப் படிக்க வைக்க வேண்டும். பள்ளிக்குப் பிறகு மாலை நேரத்திலும்
மாணவர்கள் படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். இந்த
நேரத்தில் அனைத்துப் பாட ஆசிரியர்களும் பங்கேற்று கற்றல் பணி சிறப்பாக
நடக்க ஒத்துழைப்புத் தர வேண்டும்.
மாலை 6 மணிக்கு மேற்பார்வைப் படிப்பு முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப
வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாணவர்கள் 6 மணிக்கு மேல் பள்ளி
வளாகத்தில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...