ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக் கல்வியியல்
ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிலரங்கம் சென்னையில்
புதன்கிழமை தொடங்கியது.
முதல் கட்டமாக, தமிழ் மொழியில் திறனைச் சோதிக்கும் வகையிலான புதுமையான
கேள்விகளைக் கேட்பது தொடர்பாக, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைச்
சேர்ந்த விரிவுரையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த விரிவுரையாளர்கள் மூலம், ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பில் சேரும்
மாணவர்கள், புத்தாக்கப் பயிற்சிக்கு வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்
ஆகியோருக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக பயிற்சிகள்
அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் பாட ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் திட்ட இயக்குநர்
எல்.ராமமூர்த்தி, தமிழ் மொழியில் புதுமையான கேள்விகளை வடிவமைப்பது தொடர்பாக
விரிவுரையாளர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் பயிற்சி தொடர்பாக அவர்
கூறியது: தமிழ் மொழி வினாத்தாள்களில் இலக்கியம் சார்ந்த கருத்துகளைச்
சோதிக்கும் கேள்விகளே அதிகம் இடம்பெறுகின்றன. மாறாக, பேசுதல், எழுதுதல்
ஆகிய மொழித்திறன்களைச் சோதிக்கும் வகையிலான கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற
வேண்டும்.
அந்த மொழியறிவுத் திறனை மாணவர்களிடம் எப்படி வளர்க்கலாம் என்பது
குறித்தும், இந்தத் திறன் தொடர்பான சரியான கேள்விகளை வடிவமைப்பது
தொடர்பாகவும் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்ககப்பட்டது என்றார்
ராமமூர்த்தி.
இப்போது, தமிழ் மொழி வினாத்தாளில் மாற்றம் செய்வதற்கான மூன்று நாள்
பயிலரங்கம் நடத்தப்படுகிறது. விரைவில் பிற பாடங்களுக்கும் அந்தந்தத் துறை
நிபுணர்களைக் கொண்டு வினாத்தாள் வடிவமைப்பை மாற்றுவதற்கான பயிலரங்குகள்
நடத்தப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...