Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறை

                   'தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

                தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையும், ஜூன் 16 முதல் 30 வரை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்தாண்டு 'ஆன்லைன்' மூலம் 'கவுன்சிலிங்' நடந்தது.இதில் பல பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

                 குறிப்பாக, 'முதல் நாளில் மாவட்டத்திற்குள் நடந்த 'கவுன்சிலிங்'கில் காண்பிக்கப்பட்ட காலியிடங்கள், மறுநாள் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை' என்றும், உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல் நாளில் 'சர்பிளஸ்' மாறுதலில் காட்டப்பட்ட கூடுதல் பணியிடங்கள், மறுநாளில் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை. இதனால், பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரவில் நடந்த கவுன்சிலிங்: 'கடந்தாண்டு, காலை 10 மணிக்கு 'கவுன்சிலிங்' துவங்கியது. ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் மதியம் 1 மணிக்கு மேல் தான் அனைத்து நாட்களிலும் துவங்கியது. குறிப்பாக, இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பணிமாறுதல் மாலை துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. அதேபோல், மாவட்டங்களுக்கு இடையேயான பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலும் இரவு முழுவதும் நடந்தன.

இதுகுறித்து விசாரித்தாலே பல விஷயங்கள் வெளியே வரும்,' என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். டி.இ.ஓ.,க்கள் மாற்றம் விவகாரம்: இதுதவிர, கல்வித் துறையை 'கலங்கடித்த' பல விஷயங்கள் குறித்தும் உளவுத்துறை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் 'லிஸ்ட்' பணி மூப்பு அடிப்படையில் வெளிப்படையான அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்தாண்டு, பதவி உயர்வோ, பணியிட மாற்றமோ ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியான உத்தரவுகள் வழங்கப்பட்டு 'ரகசியம்' காக்கப்பட்டது.

மேலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தொலைதுார மாவட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மாற்றப்பட்டு, பின் ஒருசில வாரங்களில் மீண்டும் அவர்கள் ஏன் மாற்றப்பட்டனர் என்றும், அவர்களின் பெயர் விவரங்களும் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தாண்டு நடந்த ஆசிரியர் 'கவுன்சிலிங்'கில் அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தி குறித்து சங்கங்கள் சார்பில் அரசு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் அரசியல் குறுக்கீடு மற்றும் பேரம் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது," என்றார்.

காத்திருக்கு 60 உத்தரவுகள்!பள்ளிக் கல்வியில் கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட நுாற்றுக்கணக்கான அமைச்சுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, கண்காணிப்பாளர் மாறுதல் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கான 60 பேருக்கான உத்தரவுகள் தயாரிக்கப்பட்டு, இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், ஏதோ காரணத்திற்காக அந்த 60 பேரின் உத்தரவுகளும் காத்திருக்கின்றன, என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive