Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

என்.டி.எஸ். தேர்வில் தமிழக மாணவர்களின் நிலை கவலைக்கிடம்


              "தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,), தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது" என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

             தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (என்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில், 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். முதல்நிலை தேர்வு, மாநில அரசால் (பள்ளிக் கல்வித்துறை) நடத்தப்படும்.

                    இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2ம் நிலை தேர்வை என்.சி.இ.ஆர்.டி., நடத்தி தேசிய அளவில் ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்கின்றது. இந்தாண்டு முதல்நிலை தேர்வு நவ.17ம், இரண்டாம் நிலை தேர்வு, 11.5.2014லும்நடக்கின்றன. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், மாதம் ரூ.500ம், இளங்கலை பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.ஆயிரம், முதுகலை பட்டப் படிப்பில் மாதம் ரூ.2 ஆயிரம், எம்.பில்., பி.எச்டி., படிக்கும்போது மாதம் ரூ.3 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

                அரசு மற்றும் உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் இத்தேர்வில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் பாடங்களிலும், "மனத்திறன்" தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

                   பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டங்களுக்கு இணையாக கேள்விகள் இடம் பெறுவதால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இதில் தேர்ச்சி பெறுவது "குதிரை கொம்பாக" உள்ளது. குறிப்பாக, "மனத்திறன்" பாடப் பகுதி கேள்விகளை அரசு பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளக்கூட முடியாததால், இதில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

                     இதனால், மாநில அளவில் இதன் தேர்ச்சி விகிதமும் 6 சதவிகித்திற்கு கீழ் தான் உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பங்கேற்பதில் ஆர்வம் காட்டாததால், தேர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளாக "ஜீரோ"வாக நீடிக்கிறது.

                        இத்தேர்வு குறித்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஆசிரியர்களும் இதை பெரிதாக கண்டுகொள்ளாததால், மாணவர்களின் ஆர்வமும் குறைந்து விட்டது. இதனால் தேசிய அளவில், பள்ளிக் கல்வியில் தமிழகம் பின்தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

                        கல்வியாளர்கள் கூறியதாவது: இத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் காணாமல் போய்விடுகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு இத்தேர்வு குறித்தே எவ்வித விவரமும் தெரிவதில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் "ஜீரோ"வாக உள்ளது.

                   நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களால் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு, ஆரம்பத்தில் இருந்தே தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். தேர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

                    கல்வித் துறையில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில், செயலாளர் சபிதாவும், தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜூம், இந்தாண்டு சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். நவ.,17ல் நடக்கும் தேசிய திறனாய்வு தேர்வில், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும், 90 சதவிகிதம் மாணவர்கள் இத்தேர்வில் கட்டாயம் பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

                   இதன்படி, மதுரை உட்பட பல மாவட்டங்களில், இத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படுகின்றன. இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என பெற்றோர், கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive