சென்னை எம்.ஐ.டி., அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்பான
ஆளில்லா உளவு ஹெலிகாப்டரை போல, தமிழக போலீஸ் துறையில் பயன்படுத்துவதற்காக,
மூன்று ஹெலிகாப்டர்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது: ஆறு ஆண்டுகளாக செய்த
ஆராய்ச்சியின் மூலம் "அன்மேன்டு ஏரியல் வெகிக்கிள்" (ஆளில்லா பறக்கும்
வாகனம்) உருவாக்கினோம். இதன் எடை 6 கிலோ. "ரிமோட்" மூலம் இயக்கலாம்.
அதிகபட்சமாக ஆறு கி.மீ., தூரம் பறக்கும். தொடர்ந்து ஒரு மணி நேரம் பறக்கும்
அளவில் பேட்டரி திறன் கொண்டது.
இதில் சிறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவிலும்
படமெடுக்கலாம். இதன்மூலம், ராமேஸ்வரம் "டிவி" டவரில், உப்புத்தன்மை நிறைந்த
கடல்காற்றால் ஏற்பட்ட அரிப்பு தன்மையை, 500 மீட்டர் உயரத்தில்
பறக்கவிட்டு, கேமரா மூலம் கண்டறியப்பட்டது. பின் கல்பாக்கம், கூடங்குளம்
உள்ளிட்ட பகுதிகளில் கடலோர காவல் படைக்காக உளவு பார்க்க
பயன்படுத்தப்பட்டது.
கேதர்நாத் வெள்ளத்தின் போதும் இதை பயன்படுத்தி, எங்கெங்கு ரோடு சேதங்கள்
ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவித்தோம். திருவண்ணாமலை
ஜோதி, மதுரையில் கிரானைட் குவாரி உட்பட பல இடங்களில் ஆளில்லா உளவு
ஹெலிகாப்டர் மூலம் போட்டோக்கள் பதிவு செய்யப்பட்டது.
தெர்மல் "கேமரா" மூலம் காடுகளில் இருட்டில் பதுங்கியுள்ள
தீவிரவாதிகளையும் கண்டுபிடிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்
மற்றும் அமெரிக்கா ராணுவத்தினர், எங்கள் படைப்பை பாராட்டினர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு
நாளில், இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி, பல இடங்களில் கூடிய கூட்டம்,
வாகனங்கள் வந்ததையும், அருகில் உள்ள கிராமங்களில் இருந்த நிலையையும்
போலீசார் கண்காணித்தனர்.
போலீஸ் துறைக்கு, இதுபோல் மூன்று ஹெலிகாப்டர் தயாரித்து வழங்க உள்ளோம்.
சிலநேரங்களில் டாக்டர்கள், விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள், தானம்
செய்பவர்களின் உறுப்புகளை கொண்டு வந்தால் காப்பாற்றி விடுவோம் என
கூறும்பட்சத்தில், இந்த ஆளில்லா ஹெலிகாப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சிக்கு தமிழகம்
மற்றும் மத்திய அரசு நிதி வழங்கினால், மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டம்
உள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...