தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா, ஐ.நா., சபையில், நேற்று உரையாற்றினார்.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர். பாகிஸ்தானில், பெண் கல்விக்காக பிரசாரம் செய்த, மலாலா யூசுப்சாய் என்ற மாணவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான்கள் சுட்டனர்.
இதில், மலாலாவுக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மலாலாவுக்கு, லண்டனில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது உடல் நலம் தேறியுள்ள மலாலா, நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில், நேற்று உரையாற்றினார். அப்போது, மலாலா பேசியதாவது: என் உடல் நலம் தேறுவதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
தலிபான்கள் என்னை சுட்டதன் மூலம், நான் அமைதியாகி விடுவேன் என, நினைத்தனர். என்னை துளைத்த அவர்களின் குண்டு, பல ஆயிரம் குரல்களாக உருவெடுத்துள்ளது. தைரியமும், வலிமையும் உயிர்த்தெழுந்துள்ளன. தலிபான்களுக்கு எதிராக நான் இங்கு பேச வரவில்லை.
ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தவே இங்கு வந்துள்ளேன். தலிபான்களின் குழந்தைகளுக்கும் கல்வி அவசியம். இதையெல்லாம் முகமது நபி, ஏசுநாதர், புத்தர், மகாத்மா காந்தி ஆகியோரது போதனைகளின் மூலம் உணர்ந்துள்ளேன்.
கூர்மையான வாளைவிட, பேனா முனை சக்தி வாய்ந்தது என்பது உண்மை தான். எனவே தான், பயங்கரவாதிகள் கல்வியை கண்டு பயப்படுகின்றனர். பெண்களின் சம உரிமையை கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு, மலாலா பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...