அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை
ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, வரும், 21ம் தேதி, 422
மையங்களில் நடக்கிறது. தேர்வெழுத உள்ள, 1.67 லட்சம்
விண்ணப்பதாரர்களுக்கும், டி.ஆர்.பி., இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள்
வெளியிடப்பட்டன.
அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஒருபக்கம், 15 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆகஸ்ட், 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடக்கின்றன.
இதற்கிடையே, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய, வரும், 21ம் தேதி, டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்துகிறது. ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 657 பேர், 422 மையங்களில் நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். அன்று காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு நடக்கிறது.
"அப்ஜக்டிவ்" முறையில், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்"டுகள், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று மாலை வெளியிடப்பட்டன.
தேர்வர்கள், விண்ணப்ப எண்கள் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, "ஹால் டிக்கெட்"டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். "ஹால் டிக்கெட்" எந்த காரணம் கொண்டும், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தேர்வு நெருங்கிவிட்டதால், அதற்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., முழு வீச்சில் செய்து வருகிறது. கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பும் வகையில், தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு, ஒருசில தினங்களுக்கு முன், சம்பந்தப்பட்ட மையங்களுக்கு, கேள்வித்தாள் கட்டுகள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையங்களை பார்வையிட, பல்வேறு அதிகாரிகள் அடங்கிய குழுக்களும், அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்கள், தனித்தனியாக, மாவட்ட வாரியாக சென்று, தேர்வை பார்வையிடும்.
ஒரு பணியிடத்திற்கு, 58 பேர் போட்டி போடுகின்றனர். அதிலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுக்கு, அதிகமான போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில், 33,237 பேர்; வணிகவியலில், 18,330 பேர்; வரலாறு பாடத்தில், 18,380 பேர்; கணிதத்தில், 22,497 பேர், தேர்வை எழுதுகின்றனர்.
குறைந்தபட்சமாக, அரசியல் அறிவியல் பாடத்தை, 30 பேர் எழுதுகின்றனர். "ஹோம் சயின்ஸ்&' பாடத்தை, 113 பேர் எழுதுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...