Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாமக்கல்லில் 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை சோதனை


           பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து நாமக்கல்லிலுள்ள மூன்று பிரபல தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


          இந்தச் சோதனையில் அதிகப்படியான கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

                     பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நாமக்கல் பள்ளிகள் ஆண்டுதோறும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் படித்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மற்றும் மூன்றாமிடத்தைப் பெற்றனர். இதேபோல, மற்றோரு தனியார் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடத்தையும், அதே பள்ளி மாணவர் பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

             இதுதவிர, பரமத்திவேலூர் வட்டம், கந்தம்பாளையத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர் பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பெற்றார். இந்தப் பள்ளி கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது

             இதைத் தொடர்ந்து, இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றன. சேர்க்கையின்போது அந்தப் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தைவிட மிகக் கூடுதலாக ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளிகள் கேட்கும் தொகையைச் செலுத்த முடியாத மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

              இதையடுத்து, அதிகப்படியான கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதுடன், முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பும் செய்து வருவதாக வந்த புகாரை அடுத்து, சேலம் சரக வருமான வரித் துறை இணை ஆணையர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து, மூன்று பள்ளிகளிலும் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

             காலை 10 மணிக்கு இந்தச் சோதனை தொடங்கியது. முதலில் அந்தப் பள்ளிகளிலிருந்து கல்விக் கட்டணம் செலுத்திவிட்டு வெளியே வந்த மாணவர்கள், பெற்றோர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செலுத்தப்பட்ட கல்விக் கட்டணம் குறித்து பெற்றோர்கள் தெரிவித்த பதிலின் அடிப்படையில், அதிகாரிகள் இந்தப் பள்ளிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

             இரவு வரை தொடர்ந்து நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, பள்ளியிலிருந்த பல்வேறு ஆவணங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதுடன் பள்ளி இயக்குநர்கள், ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதிகப்படியான கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கும், வரி ஏய்ப்பு செய்திருப்பது தொடர்பாகவும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

              எனினும், சோதனை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வருமான வரித் துறை அதிகாரிகள் மறுத்ததுடன், தொடர்ந்து விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

          நாமக்கல்லிலுள்ள பிரபல பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ள இந்த அதிரடிச் சோதனை தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு

           வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அந்தப் பள்ளி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்களின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, பள்ளியின் தரைவழித் தொலைபேசிகளும் பயன்படுத்த முடியாத வகையில் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால், பள்ளி இயக்குநர்கள், ஆசிரியர்கள் வெளியிலுள்ள யாரையும் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

             சோதனை நடைபெற்ற சமயத்தில் கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெற்றோர்கள் பலர் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆனால், அவர்கள் யாரும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாததால், பள்ளிக்கு வெளியிலேயே பல மணி நேரம் காத்திருந்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive