Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்


         பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்துள்ளனர்.


           பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதிய 7.99 லட்சம் பேரில் 7.04 லட்சம் பேர் தேர்ச்சிப் பெற்றனர். இவர்களில் 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப் பெற்றனர்.

                 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும் மே 10 முதல் 13 வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் துறை அறிவித்தது. மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 14, பிற்பகல் 1 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

               மொத்தம் 5 நாள்களில் ஆன்-லைன் மூலமாக 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                  காரணம் என்ன? எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்புகளில் சேருவதற்கு முக்கியமான உயிரியல், இயற்பியல், கணிதப் பாடங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

                குறிப்பாக இயற்பியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களில் சில மிகவும் கடினமாக இருந்ததால் நிறைய மாணவர்கள் 190-க்கு அதிகமாக எடுத்திருந்தும் முழு மதிப்பெண்ணை பெற முடியவில்லை. அதேபோல், கணிதப் பாடமும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய தினமே மாணவர்கள் தெரிவித்தனர்.

                 உயிரியல், விலங்கியல் பாடங்களிலும் நிறைய பேருக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. மருத்துவம், பொறியியல் கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் இந்தப் பாடங்களின் மதிப்பெண் முக்கிய இடம் வகிப்பதால் மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புள்ளதா என்று அறியவும் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்திருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

                தங்களது குழந்தைகள் எவ்வாறு தேர்வை எழுதியுள்ளார்கள் என்று அறிந்துகொள்ள பெற்றோர் ஆர்வமாக உள்ளதாலும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒரு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

                  விடைத்தாள் நகல் எப்போது கிடைக்கும்? ஆன்-லைன் மூலமாக மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக, விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள் ஸ்கேன் எடுக்கும் பணிகள் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

            ஆன்-லைன் மூலம் வந்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதன் பிறகு தேவைப்படும் விடைத்தாள் எண்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்படும்.

                    மாவட்டங்களிலிருந்து விடைத்தாள்கள் வரத் தொடங்கியவுடன், அவற்றை ஸ்கேன் எடுக்கும் பணிகள் தொடங்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பணிகள் நிறைவடைய ஒரு மாதம் வரை ஆகலாம் எனத் தெரிகிறது.

              கடந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive